வெண்ணிற இரவுகள்

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

வாசித்தது:- வெண்ணிற இரவுகள்
ஆசிரியர்:- ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி
வகை:-நாவல்
பதிப்பகம்:-அகரம்
பக்கங்கள்:- 95
விலை:- 75 ரூபாய்
மொழிபெயர்ப்பு:- ரா.கிருஷ்ணையா

“வெண்ணிற இரவுகள் ”  முகநூல் தளத்தில் இந்த கதையைப் பற்றி பதிவு எழுதாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாயகி நாஸ்தென்காவைப் பற்றியும் அவ்வளவு பதிவுகள். அப்படி என்ன இந்தக் கதையில் இருக்கிறது என்ற ஆர்வம் இந்தக் கதையைப் படிக்க காரணமானது.

இனி(ய)வெண்ணிற இரவில்:-
தன்உடையுடன் பேத்தியின் உடையை ஊக்கு போட்டு இணைத்தே வைத்திருக்கும் பாட்டியின் வளர்ப்பில் நாஸ்தென்ஸ்கா நாயகி.

தனிமை விரும்பி, யாரிடமும்  பேசி பழகத்தெரியாதவன். ஆனால் கட்டிடங்களோடு பேசும் கதாநாயகன் !பழைய கட்டிடமானால் எப்போது இடிந்து விழுவேனோ தெரியவில்லை என்பதாகவும்,புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமானால் ஜிகுஜிகு வென இருப்பதாகவும் கற்பனை செய்து கொள்வான்.

இரவு 1.:- நாயகனும் நாயகியும் எதிர்பாரா விதமாக  சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பும் சுவாரசியமானது. அந்த சூழல் அவளுக்கு அவனை நல்ல ஆண்மகனாக  உணரச்செய்கிறது.
  2ஆம் இரவு:- அந்த நம்பிக்கையால் அடுத்த நாள் இரவு சந்திப்பில்,  இருவரும் தங்களை பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டு பேசுகின்றனர். அவளோ நெடுநாள் பழகிய தோழிபோல் அவனிடம் நன்கு சிரித்துப்பேசுகிறாள். அன்றைய சந்திப்பின் முடிவில் ஊருக்குச் சென்ற தன் காதலன் திரும்பி வந்தும் தன்னை காண வராததைக் கூறுகிறாள்.  கடிதம் எழுதுங்களேன் என்று நாயகன் கூற , முன்பே தயாராக எழுதி வைத்திருந்த கடிதத்தை கொடுத்து அவனிடம் சேர்த்து  விடச் சொல்கிறாள்.

நாயகனோ  தன்னிடம் எந்த பெண்ணாவது இரண்டு வார்த்தை பேச மாட்டாளா என்றிருப்பவனுக்கு நாஸ்தென்ஸ்கா உரிமையுடன் சிரித்து பேசுவதால் அவனுக்கு அவள் மீது ஈர்ப்பு வர ,ஆனால் (அம்பியாக) அவளிடம் சொல்லாது கடிதத்தை அவள் சொல்லிய முகவரியில் கொண்டு சேர்க்கிறான்.

3ஆம் இரவு:-கடிதத்தை சேர்த்த நிம்மதியினால் சந்தோஷமாகவும் ,காதலன் தன்னைத்தேடி வருவானோ மாட்டானோ என்ற குழப்பத்தில்  சோகமாக ,வெறுப்பாக, கோபமாக என்று  உணர்வின் கலவையாக மாறி மாறி பேசுகிறாள். அவளின் பேச்சுக்கு ஏற்ப அவளை ஆறுதல்படுத்தும் விதமாக (தனக்கு சாதமாக அவளை தூண்டிவிட நினைக்காது) உண்மையான அக்கறையுடன் அவர் வந்துவிடுவார் எனச் சொல்கிறான்.

பேச்சு வளர ஒருநிலையில் தான் அவளை நேசிப்பதை  சொல்ல முற்பட ,அதைப் புரிந்து கொண்ட அவளோ,   ‘சொல்லாதீர்கள் நீங்கள் என்னை  காதலிக்காமல் இருப்பதால்தான்  உங்களிடம் இவ்வளவு பேசுகிறேன்’ என்கிறாள்.

4ஆம் இரவு :- அவனுக்கு முன்பே வந்து காத்திருக்கும் அவள் பதில் கடிதமும் இல்லை, காதலனும் வரவில்லை என அவள் மீண்டும் அழுதுகொண்டு வெறுப்புடன் பேச… நீண்டு கொண்டே போகும் பேச்சு. ஒருகட்டத்தில் அவள்  தன் காதலனுடன் ஒப்பிட்டு நீங்களாக இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டீர்கள் தானே என்று பலவாறு தன் காதலனை விட நீ உயர்ந்தவன் என்று  தொடர்ந்து பேசிட ,அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாதவனாக, ‘நான் உன்னை விரும்புகிறேன் அதற்கு காரணம் உங்களுடைய பேச்சும்  சிரிப்பும் , இப்படிச் சொல்வதால் இதற்குமேல்  நீங்கள் என்னோடு பேசுவீர்களா என்பதும் தெரியவில்லை. உங்கள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. நான் கிளம்புகிறேன் என்கிறான்.

நாஸ்தென்காவோ, காதலன் தன் அன்பை அலட்சியப்படுத்தி விட்டாதாகவும், இனியும் அவனுக்காக காத்திருப்பதில் அர்த்தமில்லை என்றும்  சொல்வதோடு,  காதலனே வந்து கூப்பிட்டு அவனுடன் சென்றாலும் கூட உங்களை நான் மறக்கமாட்டேன் என்கிறாள் முத்தாய்ப்பாக முடிக்கிறாள். அதுதான் அவளின் மனநிலை!
அடுத்துபடியாக இருவரும் கைகோர்த்தபடி  வாழ்வுக்கான  திட்டங்களை சந்தோஷத்துடன்
பேசி நடந்திட,திடீரென்று  அங்குவரும்  காதலன்  அவளைக் கூப்பிடுகிறான்.
நாஸ்தென்கா என்ன செய்தாள்?
நாயகனின்  செயல்பாடு என்ன?  இரவு யாருக்கு விடிந்தது?  புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ரசித்தது:- பாட்டியின் உடையுடன் தனக்கு பதிலாக காது செவிடான வேலைக்காரியின் உடையை ஊக்கு போட்டு மாட்டிவிட , பாட்டி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாது விழிக்கும் வேலைக்காரி ஊக்கை கழற்றிவிட்டு ஓடிவிட்டாள்  என்று சொல்லி சிரிக்க, நாயகனும் கூட சிரிக்க அதற்கு நாஸ்தென்கா எனக்கு அது வேடிக்கை நான் சிரிக்கலாம். நீங்கள் சிரித்தால் அது பாட்டியை கேலி செய்வதாகும். எனவே நீங்கள் சிரிக்காதீர்கள் என்கிறாள்.

தனக்கும் பாட்டிக்குமான உறவை அன்பை புரிந்தவளாக தான் மட்டுமே கிண்டல் செய்யலாம் என்பதாக உறவின் உரிமையை நிலைநாட்டிக்கொள்கிறாள்.

நாயகன் நாஸ்தென்காவை நேசித்தாலும் எங்கிருந்தாலும் வாழ்க என்ற ரீதியில் அவளுடன் பேசிய நான்கு இரவுகள் அவனைப் பொறுத்தவரை வெண்ணிற இரவுகளாக (இரவின் இருள் இல்லாது ) மனதில் என்றும் அந்த இனிய நினைவுகளுடனே வாழத்தொடங்குகிறான்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑