தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

வாசித்தது:-தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
ஆசிரியர்:-சசிவாரியர்
மொழிபெயர்ப்பு:- இரா.முருகவேள்
பதிப்பகம்:- எதிர்வெளியீடு
பக்கங்கள்:- 272
விலை:-ரூ 250
வகை:- கட்டுரைகள்

குறிபேட்டினைத் திறக்குமுன்:-
முன் அட்டை குறித்து :- காதல், சரித்திரம், குற்றங்கள், திகில் என கதைகளுக்கு  முன் அட்டை வடிவமைப்பது எளிது. கட்டுரைகளுக்கு, வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு அட்டை வடிவமைப்பது அதன் ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது.

‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ இதுபோன்ற சமூகத்தின் பிரச்சனைகளைப் பேசுவதற்குரிய புத்தகத்தின் அட்டைப்படம் அமைக்க மிகமிக நுட்பமான தெளிந்த சிந்தனை வேண்டும்.

நீதிபதிகள் தூக்கு தண்டனை எழுதியதும் திரும்ப இதுபோல் தீர்ப்பை எழுதக்கூடாதென  அவர்களின் பேனாமுனையை  மேசையின்மீது அழுத்தி உடைத்துவிடுவார்களாம். எத்தனை பேருக்கு நீதி வழங்கிய பேனா ஒரு உயிரை எடுப்பதற்கு காரணமாகிறதென. நீதிப்படி வழங்கிய தீர்ப்பானாலும் தூக்குதண்டனை என்பதனால்.இந்த கருத்தையும் இந்த புத்தகம் எழுதுவதற்கு காரணமானவரின்  மன உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையிலுமாக பேனாவின் ‘நிப்’ பகுதியை பிளவாக்கி அதை தூக்குக்கயிராக, சுற்றுப்பகுதியை  தூக்குமரமாக, பேனாவின் கீழ் பகுதியை உள்ளே செல்லும்  பாதாளமாக அமைத்திருப்பதும் இதையெல்லாம் தாங்கி நிற்பது இந்த புத்தகத்தை எழுதக் காரணமானவரின் சாதாரண குறிப்பேட்டின் கோடுகள் இவ்வளவையும் ஒருங்கிணைக்கும் முன் அட்டை வடிவமைப்பாளர்  சந்தோஷ் நாராயணன் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும். 

நூலுக்குள் நூலாக:-
இந்த நூல் எப்படி உருவானது என்பதையும் முன்னோட்டமாக தந்திருக்கிறார்கள்.
தூக்கிலிடுபவரான  ஜனார்த்தனன் இந்திய சுதந்திரத்திற்கு முன் திருவிதாங்கூர்  மன்னராட்சியிலும் சுதந்திர இந்தியாவிலுமாக  30 ஆண்டு காலத்தில்  117 மனிதர்களை தூக்கிலிட்டவர்.
இனி அவரின் குறிப்பு(களா?) அவை மனக் குமுறல்(களா?)
நிச்சயம் புத்தகத்தை படியுங்கள்.

தூக்குதண்டனை  பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட…. அதனால் ஒவ்வொரு முறையும்  ஜனார்த்தனன் மனம்  பட்டபாடு.  இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின்  குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது  என குடும்பம் சார்ந்த  குறிப்புகள் ஒருபுறம்.

தன் வேலை சார்ந்து நடக்கும் நடைமுறைகள், கடவுளின் (தூக்கு தண்டனை)உத்தரவை நிறைவேற்றுவதாக நினைத்திருந்தவர்!. உண்மை  தெரிந்தபின் மாறும்  மனநிலை. தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல்நாள்  தன்னுடன் தண்டனையை நிறைவேற்ற  உதவிக்கு வருபவர்களுக்குமாக தன் கிராமத்தில் காளிகோயிலில் பூசாரி சேவலை பலியிட்டு தன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப மேற்கொள்ளும் சடங்கு சம்பிரதாயம். மற்றொருநாளில் சடங்குகளை நடத்தித் தரும்  பூசாரியிடம் அது பற்றி பேச, அவருக்குத் தெரிந்தவகையில் பதில் சொல்ல, விதியைக் காரணம் காட்டும் அவரின் பதிலை ஏற்க இயலாதவராகிறார்.

தன் சிறுவயது (குரு) மாஷ்(டர்) சொல்லும் குரு சிஷ்யன் கதையில் சிஷ்யன் தவறு தன்னுடையது என்று கூறாமல் தவறை மட்டும் சொல்லி பரிகாரம் கேட்க குருவோ தவறுக்கு பரிகாரம் நெருப்பில் பாய்ந்து உயிரைவிடுவது என்று சொல்ல சிஷ்யன் அதேபோல் செய்து உயிரை விடுகிறான். அதையும் தன்பாணியில் யோசித்து சமாதானம் ஆகாமல்  தன்னைத் தானே கேள்விகேட்டு ஒருமனிதனைக் கொன்ற பாவத்திலிருந்துவிடுபட அரசன் ஏன் அவ்வளவு சடங்குகள்  செய்கிறான்? என யோசிக்க ,அவர்  உங்கள் குற்றத்திற்கு  உண்மையான பரிகாரம் என்ன என்பதை உங்கள் இதயத்தைக் கேட்டுத் தான் தெரிந்துகொள்ள வேண்டுமே தவிர…நேரத்தை வீணாக்கும் வெட்டிச் சடங்குகள் அல்ல “என்று உணர்கிறார். அவர் படிப்பு மூன்றாம் வகுப்புவரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிந்தனைக்கும் படிப்பிற்கும் சம்பந்தமில்லை என சுரீரென  புரிகிறது.

மதுஅருந்தாவர் மதுக்கடையில் விருப்பமின்றி வேலைசெய்வதோ ஊணை  உண்ணாதவராக  ஊதியத்திற்காக  ஊழியம் பார்ப்பவரோ மற்றவரிடம் கையேந்தாத நிலை, வேலை என சமாதானம்  கொள்ளலாம். ஆனால் தனக்கு சம்பந்தமில்லாத உயிரை எடுக்கும் லீவர்(இயக்குபவராக) கருவியாக மட்டுமே தான் என்று நினைக்க மனமில்லாதவராக தான் அவர்களின் மரணத்திற்கு காரணமாகிறோமே …என்றே மறுகி … மறுகி…

நிச்சயமாக அடுத்த பிறவியில் காக்கும் கரங்களோடு , கழுத்தில் மாலை (ஸ்டாஸ்கோப்) யோடு மருத்துவராக பணிபுரிவார் என்றே நம்புகிறேன்.
அன்றே கொல்லும் அரச நீதி தப்பிக்கலாம்.!
நின்றுகொல்லும் ….நீதி
தப்பிக்க…!!
என்றும் கொல்லுமே  மனநீதி!
தப்ப…
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடிய வள்ளலார் பிறந்த தமிழ்நாடு
விளக்கில் வீழும் விட்டிலைக் கூட காக்கும் துறவிகள் தோன்றிய இந்தியா
உலகில் கருணையைத் தவிர ஏதுமறியா அன்னை தெரசா
எடுத்துக்காட்டாய் …. எத்தனை சொன்னாலும் திருந்தாதவர்கள்
சாதி (க்காத ), பணத்திற்காக , பொறாமைக்காக , ஏதுமில்லா வெட்டி வீம்புக்காக  கொலை செய்பவர்கள் இறுதிவரை இரு….ப்பார்.
இந்தபுத்தகத்தை படிப்பதனால்  ஒரு உயிரைக் கொல்லவோ, அதைவிடவும் கொடுமையான ஒரு உயிரை துன்புறுத்துவதின் வலியை உணர்ந்து மனம் மாறி நடந்தால் அதுவே இந்த புத்தகத்தை எழுதிய ஜனார்த்தனின் வெற்றி.
இந்தபுத்தகத்தை எழுத உதவியர்களுக்கும் வெளியிட்டவர்களுக்கும் நன்றிகள் பல. 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑