வாடா மலர்(vada malar)

வாசித்தது:- வாடா மலர் (vada malar)
ஆசிரியர்:- மு.வரதராசனர்.
வகை:- நாவல்
பதிப்பகம்:- பாரி நிலையம்

முன்னுரையை பெரும்பாலும்  புத்தகத்தை எழுதியவரோ பதிப்பகத்தாரோ, அல்லது வேறு யாரேனும் எழுதுவார்கள்.  வாடா மலரில் கதையின் பாத்திரம் ஒன்று பேசியதையே கொடுத்திருப்பது இந்த புத்தகத்தின் கூடுதல் சிறப்பு என்று சொல்லலாம்.

கதை:- வாடா மலரில் மு .வ.அவர்கள் இரண்டு நண்பர்களின் கதையாக கொண்டு சென்றிருப்பார். சராசரி தாய் தந்தையினரால் வளர்க்கப்பட்டு சராசரி வாழ்க்கை வாழும் குழந்தைவேல். பக்கத்து வீட்டு தானப்பனும் தங்கை  சுடர்விழியும் சிறுவயதிலேயே தாயை இழக்க, வந்த சித்தீ எல்லா வழியிலும் கசக்கி பிழிகிறாள். ஆனால் தானப்பனுக்கு கல்வி கசக்கவில்லை. படிப்பதற்கு நேரமில்லாமல்  பள்ளிக்குச் செல்லும் வழியில் நண்பனை  சொல்லச் சொல்லி கேட்டு மனதில் பாடங்களை பதித்துக்கொள்கிறான்.
பசியோடும் அடி உதைகளோடும்  போராட முடியாமல் ஒருநாள் வீட்டை விட்டு  ஓடிப்போகிறான்.
பணம் சம்பாதித்து பெரிய ஆளாக ஊர் திரும்ப வேண்டும் என்று நோக்கம் நல்லதாக, ஆனால் தானப்பன் தான் வேலை செய்யும் புலால் உணவகத்தின் முதலாளியால் தவறான வழிகாட்டுதலில் பணம் சம்பாதிக்கும் ஆசையினால் போலீசில் மாட்டி சிறை செல்கிறான்.

குழந்தைவேல், கல்லூரி படிப்பை முடித்ததும்  பெற்றோர்  அவனை  தங்கள் கடையின் ஒருபாதியை  கொடுத்து அவனது வருமானத்திற்கு வழி செய்து பூங்கொடி என்ற பெண்ணை  திருமணம் செய்து வைக்கின்றனர்.
தங்கைசுடர்விழி, மற்றும் குழந்தைவேலின் திருமணத்திற்கும் வராத தானப்பன்  தந்தையின் இறப்புக்காக ஊருக்கு வருகிறான். தந்தையின் நகை கடையைத் தன்பொறுப்பில் அதிரடியாய்  எடுக்க சித்தியும் அவளின் அப்பாவும் இருப்பதை சுருட்டிக்கொண்டு  ஓடி விடுகின்றனர்.

தானப்பன் தன்னுடைய செல்வத்தை, செல்வாக்கை அதிகரிக்க நகர்மன்ற தேர்தலில் உறுப்பினராக போட்டியிட உள்ளத்தனைய உயர்வாக துணைத் தலைவர் பதவி தேடி வருகிறது. பணமுள்ள பட்டதாரிப்பெண் கனகுவை  மணக்கிறான். முன்பு முதலாளிக்காக  விற்ற கள்ளச்சாரயத்தை தான்  புதிதாக திறந்திருக்கும் புலால் உணவகத்தில் சைடு பிசினசாக செய்கிறான்.

கனகமும் தானப்பனும் ஒரே நாளில் இறந்துபோக போலீஸ் விசாரணையில் கனகு  எழுதிய கடிதங்கள் கிடைக்கிறது. அவளின் துர்நடத்தை, தன்னை மன்னிக்கச் சொல்லியது, சொத்து கேட்டு கணவனுக்கு தொல்லை கொடுத்தது எல்லாம் தெரியவருகிறது. அவன் தராதால் கணவனுக்கும் தனக்குமாக பாலில் விஷம் கலந்து  கொடுத்திருக்கிறாள் என்பதை தெரிவிக்கின்றனர்.

தங்கைகளின் திருமணத்திற்கும் படிப்புக்கும்  தானப்பன்  முன்பே ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். அவன் வாங்கிப்போட்ட இடத்தில் அவனின் விருப்பபடி பள்ளிக்கூடம் கட்டுகிறார் முருகைய்யா. அந்த பள்ளியைக் கட்டுவதற்கு நிலத்தை  சீர் செய்யும்போது ஒரு வாடாமல்லிகைச் செடியைப் பார்க்கின்றனர் அதை வெட்ட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். பள்ளிக்கு வாடாமலர் என்று பெயரிடுகிறார்கள்.

காட்டாறாய் சென்று கொண்டிருந்த தானப்பன் வாழ்க்கையில்  திரு.வி.க .வின் பேச்சும்  புத்தகமும் தமிழ் தென்றலா(ல்)க மனம் மாறுகிறான். பால்யம் முதல் பழகிய நண்பனால் வராத மாற்றத்தை படித்த புத்தகம் ஏற்படுத்துகிறது. அப்படியானால் உண்மையான நல்ல நண்பன் புத்தகம்தானே! 

ரசித்தது:- தானப்பனும் குழந்தைவேலும் சிறுவர்களாக இருந்தபோது  கரித்துண்டுகளால் மீசை வரைந்து அதை வீட்டிலுள்ள கண்ணாடியில்  பார்க்க  முயற்சிக்க , அம்மா அப்பாவுக்கு பயந்து  பக்கத்திலுள்ள குட்டையில் பார்க்கின்றனர்.அப்போது தவளை ஒன்று தாவி குதிக்க நீர்  கலங்கி மீசையைப் பார்க்க  முடியாத கோபத்தில் நண்பன் சிறிய கல்லைத் தூக்கி தவளை மேல் போட தவளை தப்பித்திட  தண்ணீர் முழுவதுமாக கலங்கிப்போகிறது. நண்பர்களால்  மீசையைப் (!?)பார்க்க முடியாமல் போகிறது.

நாய் ஒன்று  தானப்பனை ஓடஓட துரத்தி  குரைக்கிறது.அவன் திரும்பி நின்று முறைக்க  தொலைவில் நின்று குரைக்கிறது.  கல் ஒன்றை எடுத்து ,அதை நோக்கி நடக்க, வாலை  மடக்கிக்கொண்டு திரும்பித் திரும்பி பார்த்து ஓடிப்போகிறது. உலகம் இவ்வளவுதான் என்பதாக  உணர்ந்தேன் என்பான்.

முன்னுரையில் இருந்த கீழ் கண்ட வரிகள்:-
அந்த மலர்கள் என்னோடு பேசுவன போல் இருக்கின்றன. அவைகள் அப்படியே இருக்கட்டும். வாழ்க்கையைப் பற்றி அவைகள் என்னவோ சொல்கின்றன. உணர்த்துகின்றன. -முருகைய்யா.
வாசனை, வடிவம், வண்ணம் இவைகள் மலர்களின் சிறப்புகள். வாசமுள்ள மலர்கள்  வாடியதும் வண்ணம் மாறி வாழ்வும் முடிந்துபோகிறது. வாசமில்லா வாடா மல்லிகை வாடுவதும் இல்லை. வண்ணம் இழப்பதும் இல்லை.மனிதர்கள் மலர்களைப் போன்று பிறந்து வாழ்ந்து  மறைந்து விடுகின்றனர்.

புத்தகங்களோ  கருத்துக்களோ  எந்த காலத்திலும் மாறுவதில்லை. திருக்குறள் தந்த தெய்வப்புலவர் அதற்கு குறளைப் போன்றே இரண்டடியில் உரைஎழுதிய அறிஞர் பெருமகனாரும் வாடா மலரின் ஆசிரியருமான மு.வ அவர்களும்  அமரரானார்கள். ஆனால்  அவர்களின் படைப்பில் உயர் தனிச் செம்மொழியான தமிழ் இன்றும்  வாடாமலராக  வாழ்கிறது. இணையதளம் என்ற  தளத்தின் வழியில் இன்னும் இளமை கூடி இளையவளாக வாழ்கின்ற  தமிழே  உண்மையில் வாடாமலர்! வயதாக வயதாக வண்ணம் மாறாத   வாடா மலராக வாழும் தமிழ்!
என்றென்றும் வாடாமலர்  தமிழே !!! 

4 thoughts on “வாடா மலர்(vada malar)

Add yours

  1. புத்தகங்களோ கருத்துக்களோ எந்த காலத்திலும் மாறுவதில்லை. திருக்குறள் தந்த தெய்வப்புலவர் அதற்கு குறளைப் போன்றே இரண்டடியில் உரைஎழுதிய அறிஞர் பெருமகனாரும் வாடா மலரின் ஆசிரியருமான மு.வ அவர்களும் அமரரானார்கள். ஆனால் அவர்களின் படைப்பில் உயர் தனிச் செம்மொழியான தமிழ் இன்றும் வாடாமலராக வாழ்கிறது. இந்தப் பார்வை நன்றாக உள்ளது

    Liked by 1 person

  2. புத்தகங்களோ கருத்துக்களோ எந்த காலத்திலும் மாறுவதில்லை. திருக்குறள் தந்த தெய்வப்புலவர் அதற்கு குறளைப் போன்றே இரண்டடியில் உரைஎழுதிய அறிஞர் பெருமகனாரும் வாடா மலரின் ஆசிரியருமான மு.வ அவர்களும் அமரரானார்கள். ஆனால் அவர்களின் படைப்பில் உயர் தனிச் செம்மொழியான தமிழ் இன்றும் வாடாமலராக வாழ்கிறது. இந்தப் பார்வை ரசிக்கும்படியாக உள்ளது.

    Like

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑