சுந்தர காண்டம்

அன்புமொழி

வாசித்தது:-சுந்தர காண்டம்
ஆசிரியர்:-இந்திரா சௌந்தர்ராஜன்
வகை:-புராணம்
பக்கங்கள்:- 243
பதிப்பகம்:-விகடன் பிரசுரம்
விலை:-ரூபாய் 250
ஓவியங்கள்:-மணியம்செல்வம்.

இந்திரா சௌந்தர்ராஜன் எழுத்தில் இராமயண இதிகாசத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சுந்தர காண்டம்.

அவரின் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்திருக்கிறேன். முதன் முதலாக அவரின்  எழுத்தை   இப்போதுதான் வாசிக்கிறேன்.
மனவலிமைக்கு இராமயணத்தின் சுந்தரகாண்டத்தை படிக்கவும் தினமும் பாராயணம்  செய்யவும் சொல்வார்கள்.

இனி(ய )சுந்தரகாண்டம் –
அவதார நாயகன், அயோத்தியின் அரசனாக,   அரண்மனையில் வாழவேண்டிய இராமன்  பதினான்கு ஆண்டுகள் ஆரண்ய வாசத்தில்.
இலங்கை வேந்தன்  சீதையை சூழ்ச்சியால் கவர்ந்து சென்று விடுகிறான்.
அரண்மனையி்ல் இருந்திந்தால்  உதவிக்கு ஆட்கள்,சேனைகள்.  வனவாசத்தில் வனத்திலிருக்கும் வானரத்தின்
உதவியை நாடி ராமனும் இலக்குவனும்  வருகிறார்கள். சுக்ரீவனுக்கும் கிட்டதட்ட இதே நிலைதான். அண்ணன் வாலி தம்பி சுக்ரீவனின் நாட்டையும், அவனின்  தாரத்தையும் அபகரித்துக் கொள்ள அதனால் அவன் குகையில் ஔிந்து வாழ்கிறான். 

இந்நிலையில்தான் இராம லெஷ்மணர் அங்கு உதவி கேட்டு வருகிறார்கள். சுக்ரீவனின் அமைச்சனான அனுமன்தான் முதலில் அவர்களைப் பார்க்கிறான்.  வாலி அனுப்பிய மாயத் தோற்றமுடையவர்களோ என அஞ்சனை மைந்தன் அஞ்சுகிறான்.  இருப்பினும் தன்னை அறியாது வணங்க,  இருதரப்பினருக்குமான  அறிமுகத்திற்கு பிறகு தன் அனுமானம் தவறென்பதை அனுமன்  உணர்கிறான்.

 போர்களத்தில் எதிரியின் பலத்தில் பாதியைக்  கவரும் வரத்துடன் வருபவன் எப்படி வீரனாவான்? தனக்கு சமபலமுள்ள வீரனை எதிர்த்து நின்று வெற்றி பெறுவதுதானே நியாயம். இதனால் இராமன்  வாலியை மறைந்திருந்து தாக்க வாலி வதை படலம் முடிகிறது.  சுக்ரீவன் இழந்த தன் நாட்டையும் மனைவியையும் பெறுகிறான்.

உதவி வரைத்தன்று உதவி என்பதாக வானரங்கள் ராம லெஷ்மணர்க்கு உதவிட வேண்டி ஆலோசனை செய்கிறார்கள். சீதையை இராவணன்  கடத்திச் சென்றதையும் இலங்கையில் இருப்பதும் தெரியவர, கடலைத் தாண்டி எப்படி யார் போவது? என்ற கேள்வி  எழ, ஜம்பவான் என்ற கரடி அனுமனின் பிறப்பு இரகசியம், அவனுக்கு கிடைத்த வரங்கள், பாலனாக இருந்த காலத்தில் செய்த குறும்பினால், முனிவர்கள் சாபமிட, அனுமன்  தன் சக்தியை மறந்துவிட, சாபவிமோசனமாக உன் சக்தியை உனக்கு யாரேனும் ஞாபகப்படுத்தினால்  தெரியவருமென்றும்  அப்போது அதனை நீ பயன்படுத்துவாய்  என்றும் கூறிவிடுகின்றனர்.
இதனை ஜாம்பவான் கரடி நினைவூட்ட, அனுமன் அவரை வணங்க,என்னை நீங்கள் வணங்குவதா?.ஐயனே !இனி உங்களை எல்லோரும் வணங்கப் போகிறார்கள். முதல் வணக்கம் என்னுடையது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் அனுமனை வணங்குகிறார்.

அனுமனோ என்னை எனக்குக் காட்டிய கண்ணாடி  நீங்கள் அதனால்  உங்களை வணங்குகிறேன் என்று சொல்கிறான்.
அனுமன் தன் சக்தியை உணர்ந்த கணத்தில் இருந்து ஆட்ட நாயகனாக  களமிறங்க, கதைத்தலைவன் இராமன் என்றாலும் சுந்தரகாண்டத்தில் ஆட்டநாயகன் அனுமன்தானே!

கடலைத்தாண்ட இராநாமத்தை உச்சரித்து விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து ,
வந்த சண்டை    விடாதவனாக, எதிரில் வரும் அரக்கியை சமாளிப்பது,  தன் இயல்பான உருவுக்கு மாறி,  இராவணனின் நகரத்தின் அழகைக் கண்டு வியப்பது,அரக்கர்கள் வாழும் இடமாதலால் கண்ணில் படும் விரும்பத்தகாத காட்சிகள், என்று எந்நிலையிலும்
தன்நிலை மறக்காது   சீதாபிராட்டியைத் தேடியபடியே செல்ல, அசோகவனத்தில் அன்னையைக் கண்டு  தான் இராமதூதன் என இராமனின் கணையாழியைத் தர, சீதை தன்னுடைய சூளாமணியைக் கொடுக்கிறாள்.
வந்த வேலை முடிந்தது.இதன் பின்னர் நடப்பதுதான் சுவாரசியம். இராவணனை சந்தித்து எச்சரிக்க  வேண்டும் ஆனால் எப்போதும் ஒரு கூட்டம் அவனைச் சுற்றி நிற்கிறது.  தவறிழைத்தால் அரசன் முன் கொண்டு நிறுத்துவார்கள் தானே! என யோசித்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தன் இனத்தின் இயல்பான வேலையான ,மரத்தை பிடிங்கி வீசி, கட்டடங்களை பெயர்த்து எறிந்து,வலுச்சண்டையை உருவாக்க,  அவன் எண்ணப்படியே அரசவையில் இராவணனை சந்திக்கும்போது  தான் இராமதூதன் எனச் சொல்லி எச்சரிக்கை விடுக்க, இருபது காதுகள் இருந்தும் அனுமன்   கூறிய எதுவும் அவனின் ஒரு செவியிலும் ஏறவில்லை.  குற்றத்திற்கு மேல் குற்றமாக அனுமனைக் கொல்ல ஆலோசிக்க,  பின்பு வீபீடணன் தூதாக வந்தவரைக் கொல்லாகாது என எடுத்துரைக்க , விநாசகாலை விபரீத புத்தியாக ,அனுமனின்  வாலை நெருப்பிட்டு அழிக்க முற்பட,அனுமன் பெற்ற வரங்கள், சிரஞ்சீவி என  சீதா வழங்கிய ஆசிர்வாதம், எண்ணி வந்த செயல், தீ அவனைத் தீண்டாதிருக்க
ஆனால்  அனுமன் தாவும் இடமெல்லாம் தீ  தன் பசியைத் தீர்த்துக்கொள்ள,
அவர்கள் வைத்த தீ  அவர்களுக்கே  வினையாக …
ஒருவழியாக களேபரத்தை முடித்துக்கொண்டு அனுமன் திரும்புகிறான்.

ரசித்தது:- இந்திரஜித், தேவர்கள்  தலைவனைப் பிடித்து இழுத்து வந்த போது தன் தந்தையிடம் பேசிய இறுமாந்த தோரணைக்கும், தான் எய்த பிரமாஸ்த்திரத்தில் கட்டுப்படாத அனுமனை வெறும் வானரம் என நினைக்க முடியாதால் வீரம்,வேகம், விவேகம்  உள்ளவன் என்றே அறிமுகப்படுத்துகிறான்.  ஒருவனுக்கு மரியாதைத் தருவது அவனது செயல்தானே!

குழந்தையாக இருக்கும்போது குரங்கும் குல்லா வியாபாரியும் கதை கேட்டிருப்போம்.
அனுமன் என்ற பெயரிட்டு பெரியவர்களுக்கு சொல்லப்பட்ட நீதிகளாக, நோக்கம் சிறப்பானால் , வலிமை வரும், தடைகளைக் கடக்கும் சமையோசிதம் வரும், வழி திறக்கும் ,செயலையும் குற்றமில்லா வகையில் செய்தால் வெற்றி பெறலாம் என்று அழகாக சொல்லப்பட்டது.

தன் பலத்தை அறியாத மனம் சாதாரணமாக இருக்கும்போது தாவி குதிக்கும் வானரம்.
தன் பலத்தை  தானே அறிவதைவிட மற்றொருவர் எடுத்துரைக்கும் போது  (புகழ்ந்துஅல்ல) மனம் விஸ்வரூபம்  எடுக்கும் அனுமனாகிறது.
மனதை குரங்குக்குதானே ஒப்பிடுகிறார்கள்.
மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு
அதை தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்  என்ற கண்ணதாசனின் வரிகள் மனதிற்குள்… ம்..ஓடிக்கொண்டு.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑