வாசித்தது: சந்திரகாந்தா
ஆசிரியர்: ஜே.ஆர்.ரங்கராஜு
பதிப்பகம்: செண்பகா பதிப்பகம்
பக்கங்கள்: 208
விலை : 210 ரூபாய்
வகை: துப்பறியும் நாவல்
க.நா.சு, இலக்கிய சிந்தனையாளர்கள் என்ற புத்தகத்தில் ரங்கராஜு பற்றி , (1920 களில்) ஒருதமிழ் வாசகப் பரம்பரையை உருவாக்க முயன்ற இருவருள் ஜே.ஆர்.ரங்கராஜூவையும் வடுவூர் துரைசாமி ஐயங்காரையும் சொல்லலாம் என்று குறிப்பிடுகிறார்.
கதை:
அந்தகால அமைப்பில் எழுதப்பட்ட கதை. எந்த காலமானாலும் காதல் மோதலில்தான் ஆரம்பமாகும் என்பது எழுதப்படாத இலக்கணம் போலும்.
புதுவருடம் (ஜனவரி 1) கோட்டை மைதானத்தில் நடக்கும் ‘ராயல் சல்யூட்’ பார்க்க சகோதரிகள் இருவர் வருகின்றனர். அக்கா சந்திரவதனா நடை உடை பழக்கம் அனைத்திலும் பண்பாடு கொண்டவள். தங்கை சுந்தரகாந்தா அப்படியே அனைத்திலும் நேர் எதிராக , பகட்டாக , ஆடம்பரமாக இருப்பவள்.
சுண்டூர் மகாராசா (வில்லன்அறிமுகம்) ஆரோகணித்து வரும் குதிரை போக்குவரத்தின் சத்தத்தால் மருண்டு தறிகெட்டு ஓடிவர, தடுமாறும் மக்கள் கூட்டத்தால் கீழே விழும் சகோதரிகள் மீது குதிரை கால்வைக்கும் நேரத்தில் ,எங்கிருந்தோ வரும் (நாயகன் அறிமுகம்) ராகவா ரெட்டியார் குதிரையின் லகானை பிடித்து இழுத்து காப்பாற்றிவிடுகிறார்.
(இனி வில்லன், நாயகன், அக்கா, தங்கை என்றே குறிப்பிடலாம்.)
வில்லன் குதிரையின் மீதிருந்து கீழே வந்து தன் பிரதாபங்கள் மற்றும் குதிரையின் பெருமைகளைச் சொல்லி
அவர்களுக்கு நேர்ந்த துன்பத்திற்காக வீட்டில் கொண்டுவிடுவதாக நயந்து பேச அதில் தங்கை மயங்குகிறாள். நாயகனின் உதவிக்கு வில்லன் பணத்தை வீசி எடுத்துக்கொள்ளச் சொல்ல,அவனோ நீ பணம் தருவாய் என நினைத்து உதவவில்லை என்று கறாராகச் சொல்லிச்சென்று விட வில்லன் சும்மா இருப்பானா ?.
திருடன் (அண்ணாசாமி பாத்திரம்) அறிமுகமே அமர்க்களமாக இருக்கும்.
வில்லன், நாயகனைப் பழிவாங்க, தன் நாவிதனுடன் சதியாலசனையில் ஈடுபட அதனை, பெரியமீசை கிருதாவுடன் தலைப்பாகைக்கட்டி அங்க அடையாளால் மாறிய சுபேதார் அண்ணாசாமி( திருடன்) கேட்டுவிடுகிறான்.
நாயகன் ராகவனுக்கு, நாராயண ரெட்டியார் என்பவரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் நாயகன் அறிந்த அறிந்திராத குடும்ப விஷயங்களை குறிப்பால் சொல்லி இக்கடிதம் கொண்டுவரும் சுபேதார் அண்ணாசாமி சொல்கிறபடி கேட்க வேண்டுமென்றும், தான் எங்கிருக்கிறேன் எனத் தேடவேண்டாமென்றும் எழுதப்பட்டிருக்கிறது. அதன்படியே அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கின்றன. படிக்க சுவையாக இருக்கிறது.
வில்லன் தங்கையை ஒருவழி செய்துவிட்டு அக்காவை குறிவைக்கிறான். அவள் நாயகனை விரும்புகிறாள்.
வில்லன் திட்டமிடும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாக யார் காரணம்?.
விறுவறுப்பு குறையாத நடைக்காகவே இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.
ரசித்தது: கதையில் அநேக இடங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இருப்பினும் கதைக்குள் வராத இருபெண்கள் கதையை ஆரம்பித்து வைக்கும் விதம் சுவாரசியனது.
Leave a comment