இலக்கியத்தில் எனக்கு மிகப்பிடித்த திருக்குறளையே முதலாவது பதிவாக பதிவுசெய்கிறேன். மறை என்பதற்கு பொருளாக பல சொற்கள் உண்டு. இருப்பினும் பொதுவாக வேதம், மற்றும் மறைதல் என்ற பொருளிலேயே நேரடியாக நாம் வழக்கமாகப் யன்படுத்துகிறோம். வேதத்தின் பொருளை அனைவராலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள முடியாது.
மறை எனப்படும் வேதம் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே உள்ளது. எந்த மதமாயினும் எந்தமொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அடிப்படையில் அனைத்து உயிர்களையும் நேசிக்க , அன்புகாட்ட, நல்லொழுக்கத்துடன் வாழ்வது பற்றியே பேசுகிறது.
தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் ஒழுக்கமாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அரசனாக இருந்தாலும் அவனும் நாட்டின் குடிமகனே. யானோ அரசன் யானே கள்வன் என்று உயிர் துறந்தவனும் மன்னன் தானே!
உலகப்பொது மறை: தனிமனித ஒழுக்கம், அரசியல், தனிமனித ஆளுமை, காதல் ,நட்பு , கூடா நட்பு,இல்லறம், துறவறம், ஊழ் ,ஊழா எனக்கேட்கும் அறிவு என எந்தத் தலைப்பில் எடுத்தாளும் இதில் இல்லாத பொருளே இல்லை எனும் படி நிறைந்து எல்லோருக்கும் பொதுவான எல்லாவற்றுக்கும் இலக்கணம் சொல்வதான ‘உலகப் பொதுமறை’.
இரண்டிகளில் மூன்று பொருள் பற்றி பேசும் திருக்குறளில் இருந்து ஓன்றிரண்டு உதாணமாகக் காணலாமே.
அறம் :-அதிகாரம் 38:- ஊழ்
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். ( குறள் 373.)
ஒருவன் எவ்வளவு நுட்பமான நூல் பல கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
உண்மைதானே!
செயலோ பேச்சோ அவனது உண்மையான அறிவின் திறத்தைக்
காட்டிவிடும்.
பொருள்:- அதிகாரம் :-107
இரவு அச்சம்:-
இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்
வன்மையின் பாற்பட்டது இல். ( குறள் 1063)
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட கொடுமை போல் வன்மையானது வேறில்லை.
உண்மையில் மானமற்றவனின் செயலன்றோ?.
இன்பம்:- அதிகாரம் :- 120
தனிப்படர் மிகுதி:-
வீழுநர் வீழப் படுவோர்க்கு அமையுமே
வாழுநம் எனும் செருக்கு. ( குறள் 1193)
காதலரால் விரும்படும் மகளிர்க்குப் (பிரிவுத்துன்பம் இருந்தாலும் ) ‘பிரிந்தவர் மீண்டும் வருவார்.வந்தபின் இன்பமாய் வாழ்வோம்’ என்று இருக்கும் செருக்குத் தகும்.
மனதை படம் பிடிக்கும் கருத்து.
நெஞ்சம் மறப்பதில்லை தானே!
அறம் பொருள் இன்பம் என எதைப் பற்றிய கருத்தும் இன்றும் என்றும் உலகத்தின் எந்த பகுதிக்கும் பொருந்தி நிற்கும் உலகப்பொதுமறையை அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்றே சொல்லலாம்.
கற்க கசடற என்று குற்றமின்றி படித்தறிந்து அதன்பின் அறவழி நடந்து வாழ வேண்டி திருக்குறளைப் படித்து அதன்படி என்றும் வாழ்வோமாக!
Leave a comment