வாசித்தது:சேரமான் காதலி
ஆசிரியர் :கவியரசர் கண்ணதாசன்
வகை:வரலாற்று நாவல்
பதிப்பகம்:கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்:680
விலை: 275 ரூபாய்
ஆசிரியரை பற்றி:
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள் அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில் நடத்தும் பாட்டுப் போட்டிகளில் கவிஞரின் பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும் அவை வாடாத பூக்களாய் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.
முன்னுரையில் கவிஞர் தன்னுடைய கதைகளில் மதக்கருத்துகள் சமுதாயக் கருத்துகள் அமையும் கருவையே அண்மைக்காலத்தில் எடுத்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நூலைப்பற்றி:
கதையின் நாயகன் மூன்றாம் சேரமான் பெருமாளின் இயற்பெயர் பாஸ்கர ரவிவர்மன். இவர் இரண்டாம் சேரமான் பெருமாளின் மைத்துனர் ஆவார். தான் விரும்பிய யூஜியானா என்ற பெண்ணோடும் தான அரசனாகும் வரை நெருக்கம் காட்டாது வைராக்கியத்துடன் இருக்கின்றான். மாமாவின் விருப்பத்திற்காக விருப்பமின்றி மணக்கும் பத்மாவதியுட னும் இல்வாழ்வில் இணையாது வாழ்கிறான். ஆனால் பத்மாவதியோ கல்லானாலும் கணவன் என்பதாக அவனின் எந்த தவறையும் மன்னிப்பவளாகவே வருகிறாள்.
வைணவ பக்தரான குலசேகர ஆழ்வாரே இரண்டாம் சேரமான் பெருமாள் ஆவார். அவர் தன் மகனான மார்த்தாண்டவர்மருக்கு பட்டம் கட்டிவிட்டு அடியவராக ஆழ்வாராக தீர்த்த யாத்திரை மேற்கொள்கிறார்.
இதனால் பொறாமை கொண்ட பாஸ்கர ரவிவர்மன் சேரநாட்டில் தங்கி வாணிகம் செய்துவந்த யூதர்கள் , மகமதியர்கள்,கிறித்துவர்களிடம்
தான் ஆட்சிக்குவந்ததும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதாகக்கூறி அவர்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கிறான்.
இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வாராக , மாத்தாண்டவர்மன் வேணாட்டு அடிகளாக சைவசமய அடியாராக கவிஞர் கருத்துக்கு ஏற்ப அத்தனை சமயக்கருத்துகளும் கதைக்கு ஏற்ப ஆங்காங்கு கவிதையாகவும் சேர்த்து கொடுத்துள்ளார்.
சேர அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாராயண நம்பூதிரி தந்திரமாக யூஜியானாவையும் மன்னான பாஸ்கர ரவிவர்மனையும் அரசியல் நோக்கத்துடன் பிரித்துவிடுகிறார்.
நீண்டகாலத்திற்குப் பிறகு மகமதியப் பெண்ணான சலீமா என்ற பெண் மன்னரின் வாழ்வில் நுழைகிறாள்.
மீண்டும் அரசாங்க நோக்கில் நம்பூதிரி அவர்களைப் பிரிக்க முயற்சித்து அவர்களை சிறையிலிடும் வரை அவரது செயல்பாடுகள் உள்ளன. மன்னனோ முன்பு யூஜியானவைப் பிரிந்ததுபோல் இப்போது சலீமாவை இழக்கத் தயாரில்லை.
நாயகன் நன்னைமக்காக பிரிந்து சென்ற யூஜியானா சலீமாவின் வருகையைக் கேள்வியுற்று திரும்ப வர , சலீமாவுக்கும் யூஜியானாவக்கும் பிரச்சனையாகும் என எதிர்பார்க்கும் நாராயண நம்பூதிரி.
அரசனையும் அரசாங்கத்தையும் காக்கும் நோக்கில் தொடரும் நம்பூதிரியின் செயல்பாடுகள் , தந்திரங்கள் அத்தனையும் முறியடிக்கும் சேரமானின் காதல் உணர்வு.
இறுதிவரையில் சேரமானின் காதலியாக இருந்ததுயார்?.
நாவலைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கல்கியில் தொடராக வெளிவந்தை நாவலாக வரலாற்றுப் பின்னணியில் சமயக் கருத்துகளும் ,அம்மன் சிவப்புக்கல் மூக்குத்தியுடன் கனவிலும் நனவிலும் வருவதும் ,முன்ஜென்ம கதைகளும் ,திடீர் திருப்பங்களும் , என சுவையாக அமைத்துள்ளார்.
Leave a comment