மருதையா தோப்பு (அத்தியாயம் 4)

(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)

முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3

குமார் தலைமையில் ஒரு சிறுவர் கூட்டம் பரபரப்பாக எதையோ தேடிக் கொண்டு வாய்க்கால் வரப்பின் மேல் வந்து கொண்டிருந்தது.

“டேய் நல்லா தேடுங்கடா; இல்லைன்னா எங்க அண்ணன் தோலை உரிச்சிடும்டா” என்று குமார் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவர் கூட்டத்தில் குமார் மட்டுமே மேல்சட்டை போட்டிருந்தான், மற்றவரெல்லாம் வெறும் கால் சட்டை மட்டுமே போட்டிருந்தார்கள். அவர்கள் பொருளாதாரம் அவ்வளவுதான்.

இவர்கள் தேடிக்கொண்டு வருகையில் எதிரே கோபாலும் குணாவும் வந்தார்கள்.

“என்னடா தேடுரீங்க, ஏதாவது தொலைச்சிட்டீங்களா” என்று கோபால் கேட்டான்.

“ஆமான்டா, எங்க அண்ணனோட செல் போன தொலைச்சிட்டு தேடரேன்” என்று குமார் ஆத்திரம் அடைக்கக் கூறினான்.

“என்னிடம் ஒரு யோசனை இருக்கு. கண்டு புடிச்சி குடுத்தா என்ன குடுப்ப”

“டேய் கோபாலு , கண்டு புடிச்சிடுவியா; வாடா சினிமாவுக்கு போலாம்”

“சரிடா. அண்ணனோட செல் நம்பர சொல்லு”

குமார் சொல்லச் சொல்ல அதை கோபால் தன் போனில் அடித்துக் கொண்டான்.

” இப்போ நான் அந்த நம்பருக்கு கால் பண்றேன், ரிங் ஆவதை வைத்து கண்டு பிடித்திடலாம்”

குமாருக்கு போன உயிர் கொஞ்சமாக திரும்ப வருவது போல இருந்தது.

கோபால் அந்த நம்பருக்கு கால் செய்து கொண்டே வந்தான். எல்லாரும் குமாரின் அண்ணன் போன் ஒலிக்கிறதா என்று காதை தீட்டி கேட்ட வண்ணம் வந்தார்கள். போன் ஒலிக்கும் எந்த சத்தமும் கேட்காததால் குமாருக்கு இப்போது வயிற்றை கலக்க ஆரம்பித்தது. சோர்ந்து போன அவர்கள் புல் மேட்டிலேயே உட்கார்ந்தார்கள்.

சினிமா ஆசையால் கோபால் தீவிரமாக யோசித்தான்.

“டேய் இந்த வரப்போட நடந்து எங்கெல்லாம் போனீங்க”

“இந்த வரப்போடதான் போனோம் மறுபடியும் இந்த வரப்போடதான் திரும்பி வந்தோம்”

கோபால் செல் போனை குமாரிடம் கொடுத்து அவன் போன வழியிலேயே போகச் சொன்னான். அவன் நடந்து நேரே மருதையா தோப்பின் உடைந்து கிடக்கும் வேலி வழியே உள்ளே போனான். கோபாலுக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் கூடவே நடந்தான்.

திடீரென்று குமார் துணக்குற்று நின்றான்; வாயை மூட சைகை செய்தான்.

அதே பேய்ச்சிரிப்பு

விறுவிறுவென்று மருதையாவை நோக்கி குமார் நடந்தான்.

பேய்சிரிப்பைக் கேட்டு எல்லாரும் தயங்கி நிற்கும்போது இவன் தைரியமாக முன்னேறி நடந்தான்.

மற்றவர்களும் சிறிது பயமும் தைரியமும் கலந்த மனதோடே பின் தொடர்ந்தார்கள்.

மருதையாமுன் வந்ததும் பேய்ச்சிரிப்பு இன்னும் பலமாகக் கேட்டது. குமார் அந்த சிரிப்பு சத்தம் வந்த இடத்தை கூர்ந்து கவனித்தான். ஒருவழியாக அந்த பெரிய வாழை இலைக் கீழிருந்து பேய்ச்சிரிப்பு வருவதைக் கண்டு பிடித்து இலையை தூக்கினான். அதனடியில் செல் போன் பேயாகச் சிரித்துக் கொண்டிருந்தது.

இந்த கூட்டம் சுடு தேங்காய் போட்டு சாப்பிட்ட போது இலையடியில் வைத்த போனைக் கண்டு பிடித்தார்கள்.

போனைத் தேடி கால் செய்த போதெல்லாம் அந்த பேய்ச்சிரிப்பு ரிங்டோன் ஒலித்து முருகன், சுப்பிரமணி, மருதமுத்து, தொரை எல்லாரையும் தொடை நடுங்க ஒடவைத்தது இவர்களுக்குத் தெரியாது.

முற்றும்.

4 thoughts on “மருதையா தோப்பு (அத்தியாயம் 4)

Add yours

  1. அந்தக் கால சுடு தேங்காய் இந்தக் கால செல்போன் இரண்டும் கலந்த திகிலுடன் கலந்த நகைச்சுவை கதை தொடர் நன்றாக இருந்தது.

    Like

    1. சுடுதேங்காயை இன்று நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது. வீட்டு பெரியவர்களுக்குத் தெரியாமல் செல்போன் போன்ற சிலவற்றை சிறுவர்கள் எடுத்துவந்து நண்பர்களிடம் பீற்றிக்கொள்வதும் பிரச்சினையில் மாட்டிக்கொள்வதும் இன்றளவும் நடப்பதுவே. செல்போனுக்கு பதில் வேறு பொருள் என்னோடு சம்மந்தப்பட்டுள்ளது. கருத்துரைக்கு நன்றி வேம்பு.

      Like

  2. கதாசிரியர் மிகத்தேர்ச்சி அடைந்து விட்டார்….. சஸ்பென்ஸ் திரில்லிங்.,…விறுவிறுப்பு…..

    Like

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑