வாசித்தது: ஹிட்லர்
ஆசிரியர்: பா.ராகவன்
பக்கங்கள்: 79
பதிப்பகம்: prodigy
விலை: ரூபாய் 25
வகை: வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் பா.ராகவன் எழுத்தில் வாசிக்கும் முதல் புத்தகம் இதுவாகும்.
வாசித்ததில்:
புத்தகத்தின் முதல்வரியே ஹிட்லரின் இறுதி பற்றிக் கூறி பின்னர் அவரின் வரலாற்றைத் துவங்கி புத்தகத்தை முடிக்கும்போது ஹிட்லர் தன் இறுதியை எப்படி மேற்கொண்டார் என்பதுடன் முடிகிறது.
வன்மம் வந்த வழி:
எந்தநேரமும் எதற்கெடுத்தாலும் அடி அடி அடி என்ற கொடுமைக்காரரே தந்தை அலாய்ஸ். அதனால் தாயின் பின்னே பதுங்கிக் கொள்ளும் அம்மா பிள்ளையாக சாதுவானவனாகவே ஹிட்லர் ஆரம்பத்தில் வளர்ந்தார்.
தந்தை சுங்கத் துறை அதிகாரியானதால் இடமாற்றல் இருந்துகொண்டேயிருக்க ஹிட்லர் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. உயர்நிலைக் கல்வி பயிலும்போது ஆசிரியர்கள் அவருக்கு படிப்பு வரவில்லையென தாயிடம் கூற, அவரோ தனக்கு நன்றாக ஓவியம் வரைய வருகிறதென வீட்டில் கூற, அதற்காகவும் 3 ஆண்டுகள் வரை விளாசித்தள்ளிய அலாய்ஸ் பின்னர் ஹிட்லரை விட்டு நிரந்தரமாக (லாஸ்) பிரிகிறார்.
வெளியூர் சென்று ஓவியம் கற்கபோகிறேன் என்று தாயிடம் கூறிவிட்டு வியன்னாவுக்கு கிளம்பிவரும் ஹிட்லர் அதற்கானத் தேர்வில் தோல்வியடைய,ஆசிரியர்கள் சிற்பக்கலை கட்டடக்கலைக்கு முயற்சித்துப் பாரேன் என்றிட ,அதற்கும் முடியாதபடி தாய் புற்று நோயால் இறந்துவிட, கிடைக்கும்வேலை, கிடைத்த இடம், என வயிற்றுப்பாடும் வாழிடமும் அவருக்கு கடினமாகிறது.
கல்வி, வியாபாரம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் யூதர்களே கோலோச்ச , பலரும் பசியாலும் பஞ்சத்தாலும் வாடிக் கொண்டிருக்க, யூதர்களில் ஒருவர் கூட ஏழையாக இல்லை என்பதையும் கவனித்த ஹிட்லருக்கு பின்னாளில் அதுவே வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீது நீடிக்கும் கொலை வெறிக்குக் காரணமாகிறது.
ஆஸ்திரிய ஜெர்மானியர்களில் 90% கூலித்தொழிலாளர்கள் குறைந்த கூலியில்,வறுமை நிறைந்த வாழ்வைத் தொடர்ந்த நிலையில் ஒருநாள் தொழிலாளர் புரட்சியாக வெடிக்கிறது. இதனால் ஹிட்லர் அங்கிருக்க முடியாத நிலையில், உங்களது பிரச்சனைக்குக் காரணம் யூதர்களும் மற்ற வந்தேறிகளுமே அவர்களை விரட்டிவிட்டு முழுமையான ஜெர்மானிய அரசை அமைக்கத் தோன்றவில்லையே என உள்ளுக்குள் குமுறியபடி அங்கிருந்து ம்யூனிச்க்குப் போகிறார்.
வாய்ப்பு:
ஹிட்லர் அங்கு வந்து சேர்ந்த 1914-ல் உலகப்போரில் ஜெர்மன் அடியெடுத்து வைக்க, சற்றும் யோசிக்காது வாய்ப்பைப் பயன்படுத்தி இராணுவத்தில் சேர ,அவருக்கு அங்கு தகவல் தொடர்பு பணியில் வேலை கிடைக்கிறது.
நான்கு ஆண்டுகள் தொடர் போரினால் ஜெர்மனியின் பொருளாதாரம் நிலைகுலைய , அதனால் கம்யூனிஸ்டுகள் மன்னராட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகின்றனர். சமயத்தை பயன்படுத்தி யூதர்கள் கம்யூனிஸ்டுகளைத் தூண்ட சூழ்ச்சியை உணராத தொழிலாளர்களும் திடீரென ஒருநாள் முழுவேலை நிறுத்தத்தில் ஈடுபட ,தொழிற்சாலைகள் ஆயுத உற்பத்தி நிறுத்த, மன்னர் தப்பி ஓடிவிடுகிறார். விளைவு ஜெர்மனி வீழ்ந்துவிடுகிறது.
ஹிட்லர் துடிதுடித்துப்போக, ஜெர்மனியை மலரச்செய்ய ,அவரின் புரிதல்படி கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக இருந்த மன்னரை கம்யூனிஸ்டுகள் நம்ப வைத்து ஏமாற்றி முதுகில் குத்திவிட்டதாக நினைக்கிறார். அதனால் கம்யூனிஸ்டுகளை வீழ்த்துவதும் யூதர்களை நசுக்குவதுமே வழி என்று முடிவுசெய்கிறார்.எனவே அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி , சரியான திட்டமிடுதலுடன், ஆனால் தடலடியான செயல்பாட்டால், ஜெர்மனியின் அதிகாரத்தை கைப்பற்ற எடுத்த முயற்சி பழம் பெருச்சாளிகளால் முறியடிக்கப்படுவதுடன் திட்டமிட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
சர்வாதிகாரியாக:
சிறைவாசம் முடிந்து வெளிவந்த ஹிட்லருக்கு ஜெர்மனியின் மாறியிருந்த அரசியல் சூழலை ,இம்முறைத் தவறாகாத திட்டத்துடனும், அடுத்தடுத்த கெடுபிடி செயல்பாடுகளாலும் 100% தனக்கு சாதகமாக்கி நான் சொல்வதுதான் சட்டம் என்று முழு சர்வாதியாகிறார்.
யூதர்களை வேட்டையாட ஒவ்வொரு திட்டமாக அரங்கேற்றிட, மனிதப் படுகொலைகள் அதிகம் நிகழ்ந்த காலம் என்று கறை படிந்த வரலாற்றை எழுதக் காரணமாகிறார்.
உலகம் முழுவதும்:
ஜெர்மனியைத் தாண்டி ஐரோப்பா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு , ரஷ்யா என்று உலகையே தன் ஆளுகைக்குள் கொண்டுவரத் திட்டம் (தீட்டினால் மட்டும்போதுமா?) போட்டு சதுரங்க விளையாட்டு போல போர் நிகழ்த்தத் தொடங்க ,அவரின் ஒட்டு மொத்த சதிகள் கொலைகள் என்ற வெறியாட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக ,ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்ற போது அந்நாட்டின் புரிபடாத நிலப்பரப்பும் , குளிர்காலமும் வீரர்களுக்கு பெரும் சவாலாக மாற, அத்துடன் ரஷ்ய வீர்களின் தாக்குதலையும் எதிர் கொள்ள முடியாமல் ஹிட்லரின் படை பின்வாங்க….. சமயத்தை எதிர்பார்த்திருந்த ட பிரிட்டனும் அமெரிக்காவும் (எதிரிக்கி எதிரி நண்பனல்லவா?)கூட்டணி சேர்ந்து ஜெர்மன் எல்லையில் முன்னேற…..
தோல்வி நிச்சயம் என்று தெிரிந்தபின் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்…
தனியொருவனாக உலகை அச்சுறுத்தி ஆட்டிவைத்தவன்!
தன் ஆட்டத்தை தானே வலிந்து நிரந்தரமாக நிறுத்திக்கொள்கிறான்!.
ரசித்தது: ஏதுமில்லை.
வீரனாக இல்லாது நரிபோன்று தந்திரமாகவே செயல்பட்டு இலட்சக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தவன். வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயரெடுத்தவனின் எந்தச் செயலை ரசிக்க முடியும். இப்படிபட்டவனையும் ஒருத்தி காதலித்திருக்கிறாள் என்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது
ஹிட்லர்
Leave a comment