வாசித்தது:முல்லா கதைகள்
தொகுத்தவர்:எஸ்.லீலா.
வகை:சிறுகதைத் தொகுப்பு
பக்கங்கள்: 144
விலை: 40 ரூபாய்
பதிப்பகம்: கண்ணப்பன் பதிப்பகம்
முல்லா கதைகள் பற்றிய புத்தகத்தின் பதிப்புரையில் உள்ளதை பின்வருமாறு அப்படியே தருகிறேன்.
முல்லா பற்றிய கதைகள் அரபுநாட்டில் வழங்கி வருகின்றன. முல்லா கூர்ந்த மதிபடைத்தவர். எந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் உத்திமிக்கவர் என்று கூறியுள்ளனர்.
இந்தத் தொகுப்பில் 69 கதைகள் உள்ளன. மேற்சொன்னவாறு முல்லா தன் புத்தி சாதுர்யத்தால் சூழலைத் தனதாக்கி கொண்ட கதைகளில் ரசித்தவற்றில் சில.
1.கதைத் தலைப்பு:
‘ முல்லாவின் சொற்பொழிவு’:-
முல்லா சிறந்த அறிவாளி, தத்துவஞானி என்று பலரும் புகழ, சிலர் அவரை அவமானப்படுத்த நினைத்து ஒரு கூட்டத்திற்கு பேச அழைக்கின்றனர். முன்னமே அவர்களது எண்ணத்தை அறிந்திருந்த முல்லா கூட்டத்திற்கு சென்று , ‘இன்று நான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா ?.என்று கேட்க, கூட்டத்தினர், ‘தெரியாது’ என்கின்றனர். முல்லா சிறிதும் தாமதியாது, ‘நான் எதைப்பற்றிப் பேசப்போகிறேன் என்று கூடத் தெரியாத உங்களிடம் பேசுவதில் பயனில்லை ‘என்று கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறார். எப்புடி!.
அடுத்த நாள் மீண்டும் முல்லாவைப் பேசுவதற்குக் கூப்பிடுகின்றனர்.
முதல் நாள் போலவே முல்லா, ‘நான் எது பற்றிபேச இருக்கிறேன் தெரியுமா?.’ என்று கேட்க, இம்முறை கூட்டத்தினர் ‘தெரியும்’ என்றிட,
சற்றும் அலட்டிக்கொள்ளாத முல்லா, ‘எதுபற்றி பேசப் போகிறேன் என்று தெரிந்திருக்கும் உங்களிடம் நான் பேசுவது வீண்வேலை ‘என்று சொல்லிக் கொண்டே கூட்டத்திலிருந்து வெளியேறுகிறார்.
முல்லாவை அவமானப்படுத்த முடியாது ஏமாந்ததால் (விடாது கருப்பு போல) மீண்டும் அவர்கள் வந்து, ‘இந்த ஒருமுறை மட்டும் வந்து பேசுங்கள்’ என்று அழைக்க, மூன்றாவது நாளும் கூட்டத்திற்குச் செல்லும் முல்லா முன்பு போலவே ‘இன்று என்ன பேச இருக்கிறேன் என்று தெரியுமா?.’ என்ற கேள்வியையே முன்வைக்க,
இம்முறை ஏமாறவே கூடாதென்று எண்ணத்துடன் கூட்டத்தில் பாதிபேர் ‘ தெரியும்’, என்றும்,பாதிபேர் ‘தெரியாது’என்றும் கூறுகின்றனர்.
இதற்கு முல்லாவின் உடனடியான உச்சபட்ச பதில், ‘அப்படியானால் தெரிந்தவர் , தெரியாதவர்க்குச் சொல்லுங்கள் .நான் ஏன் என் நேரத்தை வீணாக்கிக் கொண்டு பேசவேண்டும்?’. என்றபடியே கூட்டத்தில் இருந்து வெளியேற,
‘ யாருகிட்ட எங்க கிட்டயா?.’ என்ற வசனத்துடன் நம் மனத்திரையில் வருகிறார் வடிவேலு.
2. கதைத் தலைப்பு:
‘சகிக்கவில்லை’
புத்தகத்தில் இறுதியாக உள்ள கதைதான் ‘சகிக்கவில்லை’. தலைப்பு கதையில் எப்படி பொருந்துகிறது என்பது இறுதியில் உள்ள திருப்பமும் (நாம் யூகிக்க கூடியதாக இருப்பினும்) கதையைக் கொண்டு செல்லும் முல்லாவின் பேச்சு நடையில்தான் கதையே அடங்கியிருக்கிறது.
இந்த கதையோட்டம் நான் சிறுவயதில் படித்த விக்கிரமாதித்தன் கதையில், போஜராஜன் தான் கண்டெடுத்த சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய விரும்ப ,அப்போது சிம்மாசனத்தின் 30 படிகளில் உள்ள பதுமைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு நாளும் முதலில் இந்த சிம்மாசனத்தில் இருந்து ஆட்சி செய்த எங்கள் விக்கிரம மகாராஜா பெருமைகளைத் தெரிந்துகொள் என்று தினம் ஒருகதையாக கூறிக்கொண்ட வந்து கடைசி பதுமை கதை சொல்லி முடித்ததும் எங்கள் மகராஜா இருந்த சிம்மாசனத்தில் வேறொருவர் அமர இயலாது என்று சிம்மாசனத்தோடு பறந்து சென்றிடும்.
இப்போது முல்லா கதைக்கு வருவோம். கதைப்படி முல்லா 130ஆண்டுகள் வாழ்கிறார். அதன் ரகசியத்தை அறிய அவரை பேட்டி எடுக்க பத்திரிக்கையாளர்கள் வர, சுருக்கமில்லா உடல், கண்ணாடி அணியாத தெளிவான பார்வை, கூனற்ற முதுகு அவரின் துள்ளலான உற்சாகமான வரவேற்பு கண்டு’ஐயா, இத்தனை ஆரோக்கியத்திற்கான காரணம் என்ன என்பதைக் கூறுங்கள்? என்று கேட்கின்றனர்.
முல்லா நீண்ட பட்டியலாக அதிகாலை 4மணிக்கே எழுவது முதல் இரவு படுக்குமுன் குர் -ஆன் வாசிப்பது வரை என அத்தனை நல்லபழக்கங்கள் உணவுமுறைகள் பற்றி விரிவாகக் கூற, குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் ,மேற்கூரையில் திடுதிடுவென பலத்த சத்தம் கேட்டு என்ன?.என்ன?. என்று அதிர்ச்சியுற்று கேட்கவும்,முல்லா அமைதியாக நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இவன் கவலைதான் எனக்கு. சொன்னாலும் கேட்பதில்லை, பெருந்தொல்லை .நான் ஒழுக்கமாக இருப்பதால்தானே என்னை பேட்டி எடுக்க வந்திருக்கிறீர்கள். என்றேனும் அவனைத் தேடி வந்திருக்கிறீர்களா?.
என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான் என்பதுடன் காலையில் 10,11 மணிக்குதான் எழுகிறான் ஹுக்கா புகைக்கிறான் என்று அவனைப் பற்றிய ஒழுங்கீனங்களை அடுக்கிக் கொண்டே போக…
பத்திரிக்கையாளர்கள் ஆர்வம் மேலிட ‘அதுயார்?.உங்கள் பேரனா?.’என்று கேட்க…
‘பேரனா?.அவன்தான் என் தகப்பன் 170வயதில் அவன் ஆடும் ஆட்டமும் கும்மாளமும் சகிக்கமுடியவில்லை என்று கூற…கேட்டவர்கள் மயக்கமாக, இதுதான் ‘முல்லா நச் ‘(டச் ‘)என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இது வெறும் முன்னோட்டமே !. எஞ்சிய கதைகள் ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணம் படித்து மகிழ, ‘ ‘தூக்கம் தொலைத்த முல்லா ‘, (எப்படி தொலைத்தார் ?.) தத்துவ ஞானிக்கும் முல்லாவுக்குமான ‘ யார் அறிவாளி ?’ என்றகதையில் சந்தேகத்திற்கு இடமின்றி முல்லா வெல்வது சுவாரசியம்.’ஏமாற்ற நினைத்தவன் ஏமாந்துபோனான் ‘கதையில் எப்படி ஏமாந்தான் என்பதை முல்லாவின் புத்திசாலித்தனமான அறிவினால் ஒவ்வொரு கதையும் மனம் லேசாக படித்து சிரித்து மகிழுங்கள்.
Leave a comment