உலகின் பல பகுதிகளில் மக்கள் நிலையான வாழ்வு தேடி அலைந்த கொண்டிருக்க , நிலையான அரசு சமுதாய ஒருமைப்பாடு என்பதைத் தாண்டி இலக்கிய வளமும் பெற்று திகழ்ந்தது நம் தமிழ் சமூகம்.
வாழ்வியலைச் சொல்லும் எதுவும் இலக்கியமே. இலக்கியம் என்றால் இலக்கு+ இயம்= இலக்கியம் என்பதற்கு இலக்கு- குறிக்கோள், இயம்-அடைதல் அதாவது குறிக்கோளை அடைவது என்பது பொருளாகும்.
குறிக்கோள் என்பது தான் விரும்பியபடி பாடகராக, கவிஞராக, பணக்கரராக,தொழிலபதிபராக, விளையாட்டு வீரராக ஆக வேண்டும் என்பது போன்ற பொதுவான கருத்தாகும்.
இலக்கியத்தின்படி அறம் ,பொருள், இன்பம் என்ற வரிசையில் வீடுபேறு அடைவதைக் குறிக்கும். அதாவது அறத்தின் வழியில் பொருளீட்டி, அவ்வாறு அறவழியில் ஈட்டிய பொருளை பிறர்க்கு உதவி இன்புற வாழ்ந்து வீடுபேறு அடைவதாகும்.
நம் தமிழ் இலக்கியங்களில் நேரடியாக அறநூல்களாகவே படைக்கப்பட்டவையும் , தேனுடன் மருந்தை குழைத்துத் தருவதுபோல கதையுடன் அறத்தை வலியுறுத்துவதாகவும் இலக்கியங்களை அமைத்துள்ளனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தம் சொற்பொழிவில் ,”தேன் தானும் கெடாது உண்பவனையும் கெடுக்காது “என்பார்.
அதுபோல இலக்கியத்தேனை படைப்பவனோ, பருகுபவனோ கெடுவதில்லை.
சங்க இலக்கியமோ, சங்கம் மருவிய இலக்கியமோ , சிற்றிலக்கியமோ நவீன இலக்கியமோ, காப்பியமோ
வாசிக்க தமிழ்த்தேன் !! வாசித்தேன்!!.
இனி நீங்களும் வாசிக்க …
தலையில் சூடாமணி, காதில் குண்டலகேசி, கழுத்தில் சீவக சிந்தாமணி,கையில் வளையாபதி , இடையில் மணிமேகலை, காலில் சிலம்பு . நெடுநல்வாடைக் குளிரோ, பட்டினப்பாலையின் வெயிலோ பத்து(முழ)பாட்டை குறுந்தொகை கொசுவம் வைத்து அரிதான குறிஞ்சியோ அவ்வப்போது முல்லையோ சூடி முன்பின் (அக புற ) அழகை இலக்கிய கண்ணாடியில் தன் வனப்பை பார்த்து மகிழ இரு கண்ணாக (ஈரடி)திருக்குறள் கொண்டு தமிழன்னை அழகாய் இருக்கிறாள்.
உலகின் பல பகுதியில் மக்கள் நிலையான வாழ்வு தேடி அலைந்து கொண்டிருந்த காலத்தில் நிலையான அரசு சமுதாய ஒருமைப்பாடு என்பதைத் தாண்டி இலக்கியச் செல்வத்தையும் பெற்றிருந்தது நம் தமிழ் குடிகள்.
சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுபவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவை அகப்பொருள் புறப்பொருள் பற்றியதாக அமைந்தவை.
ஆரம்ப நிலையில் படிப்பவர்க்கு அறிமுகமாக நினைவில் கொள்ள எனக்குத் தெரிந்த வரையில் சொல்கிறேன்.
எட்டுத்தொகை நூல்கள்:-
ஒரே அடிவரையறை, பலபொருள் பற்றிய நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகையாகும்.
நூலின் பெயரை எளிதாக மனதில் பதிக்க :-
அகப்பொருள் பற்றியவை:-(5)
நற்றிணை , குறுந்தொகை , கலித்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு.
இதில் நூறு என்று முடிபவை- 2
தொகை என்று முடிபவை – 2 திணை என்று முடிந்தது – 1
என்பதாக படிக்கலாம் .
புறப்பொருள் நூல்கள்:-(3)
பதிற்றுப்பத்து,பரிபாடல் , புறநானூறு.
‘ப’ வரிசை நூல்கள் என்று நினைவில் கொண்டால் எளிதாகும்.
பத்துப் பாட்டு நூல்கள்:-
ஒருபொருள் பற்றி ஒருபுலவர் பாடிய பாடல்கள் பத்துப்பாட்டு ஆகும்.
பழைய பாடல் ஒன்றில்,
“முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோல நெடுல்வாடை கோல்குறிஞ்சிபட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.”
குறிப்பிடப்படுகிறது.
எளிதில் நினைவு கொள்ள,
புறப்பொருள் நூல்கள்:-(7) அதில் ஆற்றுப் படைநூல்கள்:(5)
திரு (முருகு) ஆற்றுப் படை , (பொருநர்) ஆற்றுப் படை, சிறு (பாண்)ஆற்றுப் படை பெரும்(பாண்) ஆற்றுப் படைகூத்தர் ஆற்றுப் படை என வழங்கப்படும் மலைபடுகடாம்.
தமிழின் தனிச்சிறப்பு ஆற்றுப்படை நூல்கள்.
எஞ்சிய இரண்டு:-(7-5=2)
நெடுநல்வாடை,மதுரைக்காஞ்சி
இவை ஏழும் புறப்பொருள் நூல்களாகும்.
அகப்பொருள் நூல்கள்:-3 (10-7)
குறிஞ்சிப் பாட்டு, முல்லைப் பாட்டு, பட்டினப்பாலை. சிறுவயதில் ஐந்திணைகள் படித்திருப்போம். அதை நினைவில் கொண்டு குறிஞ்சிப் பாட்டு,முல்லை பாட்டு, பட்டினப் பாலை என்று மனதில் கொள்ளலாம்.
இலக்கியம்
Leave a comment